Tuesday, September 16, 2008

புருஷ லட்சணம்

”உத்யோகம் புருஷ லட்சணம்”இதுதான் நமக்கு பெரியவர்கள் சொன்னது. 

ஆனால் சமீபத்தில் ”கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்”படம் பார்த்தேன். அதில் ஐஸ்வர்யா மம்முட்டியிடம் சொல்லும் ஒரு வசனம் “உன்னை ஏன் கல்யாண்ம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன் தெரியுமா? உன்மேல எப்பவும் கோபப்படுவேன்.உன்னை தினமும் வெறுப்பேத்துவேன்.தலையை பிச்சுக்க வைப்பேன்.ஆனாலும் நீ அமைதியா இருப்பே.அதுதான் எனக்கு பிடிச்சிருக்கு”.(வசனம் சரியாக ஞாபகம் இல்லை.ஆனால் நான் புரிந்துகொண்டதை எழுதியிருக்கிறேன்).

இப்ப புரிஞ்சிருக்குமே எது புருஷ லட்சணம்ன்னு?

Saturday, September 13, 2008

ஜாதகத்திற்க்கு சாதகமில்லாதவன்

ஜாதகம் - சாதகம் என்ற வார்த்தையிலிருந்து மருவியதோ என்று எனக்கு சின்ன சந்தேகம் உள்ளது.எல்லாரும் ஜாதகம் பார்ப்பது அவர்கள்க்கு வருங்காலம் சாதகமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலே. அந்த ஆவலை இன்று பலர் தங்களுக்கு சாதகமாக்கி பரிகாரம்,பூஜை என்று பணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.உன் வருங்காலம் இதுதான் என்று கூறும் ஜோஸ்யர்கள், அதை மாற்ற பரிகாரமும் சொல்கிறார்கள்.அப்படி நமது தலைவிதியை பரிகாரம் மூலம் மாற்ற முடியுமென்றால் ஏன் பல ஜோஸ்யர்கள் தங்களை கோடீஸ்வரர்களாக்கும் பரிகாரம் செய்யாமல் இன்னமும் மரத்தடியிலும்,கிளி கூண்டை சுமந்து கொண்டும்,லாட்ஜ் ரூமிலும் ஜோஸ்யம் பார்க்கிறார்கள்.பொதுநலன் கருதி இருக்குமோ?அப்படியென்றால் பணம் ஏன் வாங்குகிறார்கள்?

சரி விசயத்துக்கு வருவோம்.தலைப்பில் சொன்ன அந்த ஜாதகத்திற்க்கு சாதகமில்லாதவன் அடியேன் தான். நான் கல்லுரியில் மூண்றாம் ஆண்டு படிக்கும் பொழுது எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோஸ்யர் வந்திருந்தார்.வழக்கம் போல என் ஜாதகமும் அவர் கையில் கொடுக்கப்பட்டது.இதோ என் அம்மாவுக்கும் ஜோஸ்யருக்கும் நடந்த உரையாடல்

ஜோஸ்யர்: பையனுக்கு படிப்பு வராது.வியாபரந்தான் லாயக்கு.
அம்மா: இல்லைங்க. அவன் இப்ப படிச்சிட்டுக்கிட்டுத்தான் இருக்கான்.
ஜோஸ்யர்: படிக்க்லாம். ஆனா டிகிரி வாங்க மாட்டான்.
அம்மா: அவன் இப்ப காலேஜ்லதான் படிக்கிறான்.
ஜோஸ்யர்: டிகிரி வாங்குவான். ஆனா வேலை கிடைக்குறது கஷ்டம்.
அம்மா: அவன் கம்ப்யூட்டர் இஞ்சினீயரிங் படிச்சிக்கிட்டுருக்கான்.
ஜோஸ்யர்: வேலை கிடைக்கும். ஆனா கவர்மெண்ட் வேலை கிடைக்காது.

இந்த உரையாடலின் போது நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்திருந்தேன்.கட்டிலில் இருந்து எந்திரிக்காமல் கண்களை மூடி படுத்திருந்தேன்.இந்த உரையாடலை கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.இது முதல் முறையல்ல.என் ஜாதகத்தை பார்த்த ஜோஷ்யர்கள் அனைவரும் எனக்கு படிப்பு வராது.நான் வியாபரம் செய்யத்தான் லாயக்கு என்று சொல்வார்கள்.அதனால்தான் சொல்கிறேன் நான் ஜாதக்திற்கு சாதகமில்லாதவன்.

சிறு வயதிலிருந்தே நான் வியாபரம் செய்ய போகிறேன்.எனக்கு எதுக்கு படிப்பு என்று என் பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பி செயல்பட்டிருந்தால் இன்று நான் ஏதாவ்து வியாபரம்தான் செய்து கொண்டிருந்திருபேன்.ஜாதகத்தை நம்பாமல் என் அம்மா அப்பா என்னை நம்பியதால் இன்று இந்த பதிவை எழுதி கொண்டிருக்கிறேன்.எந்த விசயத்தை நாம் முழுமையாக நம்புகிறோமோ அந்த விசயம் கண்டிப்பாக நடக்கும்.நானோ எனது அம்மா அப்பாவோ ஜாதகத்தை முழுமையாக் நம்பவில்லை.அதனால் என் விசயத்தில் ஜோஷ்யர்கள் என் தலைவிதியை நிர்ணயிக்க முடியவில்லை.என் ஜாதகமும் என்னிடம் போராடி தோற்றுவிட்டது.

ஒரு ஆறு மாததிற்கு முன் எப்படியாவது என் வருங்காலத்தை தெரிஞ்சுக்கனுமுனு எங்க அம்மா இன்னொரு ஜோஷ்யரிடம் என் ஜாதத்தை காண்பித்திருக்கிறார்கள்.என்னை பத்தி எல்லா விசயத்தையும் முன்னாடியே சொல்லிட்டாங்க போல.அந்த ஜோஷ்யரும் ஜாதகத்தை பார்த்து விட்டு ”யாரோ தப்பா ஜாதகம் எழுதி இருக்காங்க.பஞ்சாங்கப்படி இந்த நட்சத்திரம் வராது” அப்படினு சொல்லிருக்காரு.ஏன்னா ஜாதகம் பாத்து சொன்னா அவருக்கும் ஜோஷ்யம் தெரியலைனு எங்க அம்மா முடிவு பண்ணிருவாங்கனு அவருக்கு புரிஞ்சிருச்சு.

எனக்கு புடிச்ச வசனம்
“சாகற நாள் தெரிஞ்சுட்டா வாழ்ற நாள் நரகமாயிடும்”.
ஜாதகத்துல நல்லது நடக்கும்னு சொன்னா நம்புங்க.கெட்டது நடக்கும்னு சொன்னா நம்பாதிங்க.நீங்க நல்லா இருப்பீங்க.ஜாதகமே பார்க்காம இருந்தா இன்னும் நல்லா இருப்பீங்க. நாளைக்கு என்ன நடக்குமுனு யாராலும் சொல்ல முடியாது. அடுத்து என்ன நடக்குங்கிற சுவாரஸ்யத்துலதான் வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமா இருக்கு.

Monday, September 1, 2008

ஏன் இந்த கொலை வெறி?



சமீபத்தில் எனக்கு மெயிலில் வந்தது. படத்தை பெரிதாக்க பார்க்க படத்தை சொடுக்கவும்

Monday, August 25, 2008

ஆயிரம் காலத்துப் பயிர்

கட்டையனும் கரட்டாண்டியும் டீக்கடையில் ஓசி பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.கரட்டாண்டி ஒரு நகைச்சுவைத்துணுக்கைப் படித்துவிட்டு கட்டையனிடம் "நான் ஒரு கேள்வி கேக்குறேன். பதில் சொல்லு பாப்போம்"னு கேட்டான்.கட்டையனும் "சரி கேளு"னு சொன்னான்.

கரட்டாண்டி "கல்யாண வீட்டுக்குள்ளே ஏன் ஆடு மாடெல்லாம் உடறது இல்லை?".கட்டையன் "உன்னை மாதிரி திண்ணுக் கொழுத்தவனெல்லம் அதை அடிச்சு பிரியாணி போட்டுட கூடாதுனுதான்".கரட்டாண்டி "ம்ம்.கேள்விக்கு பதில் தெரியாட்டாலும் இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.". கட்டையன் "சரி சரி. நீயே பதில் சொல்லு".கரட்டாண்டி "கல்யாண்ம் ஆயிரம் காலத்துப் பயிர்.அதை ஆடு மாடு மேஞ்சுறக்கூடாதுன்னுதான்".கட்டையன் "டேய் காலாங்காத்தலேயே ஏண்டா இப்படி கடிக்கிறே?"

கரட்டாண்டி "சரி அதை விடு.கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?". கட்டையன் "ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.
அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.புரிஞ்சுதா?".கரட்டாண்டி "ம்ம்ம். புரிஞ்சுச்சு".

கட்டையன் "இப்ப நான் சொன்னது எல்லாரும் சொல்ற அர்த்தம். ஆனா இதுக்கு இன்னொரு அர்த்தம் எனக்கு தெரியும்".கரட்டாண்டி "அதானே பாத்தேன்.என்னடா எந்த வில்லங்கமும் இல்லாம விளக்கம் சொல்றானேன்னு? அதையும் சொல்லி தொலை." கட்டையன் "எந்த பயிருமே அதிகபட்சமா ஆறு மாசத்துல அறுவடை பண்ணிடலாம்.ஆறு மாசம் கழிச்சு நாம எல்லாமே சரியாத்தான் பண்ணிருக்கோமுன்னு சந்தோஷப்படலாம். ஆனா கல்யாணம் பண்ணதுக்கப்பறம் நாம் பண்ணது சரியா தப்பானு தெரியறதுக்கு ஆயிரம் வருஷம் கூட பத்தாது.அதைத்தான் அப்படி சொல்லியிருக்காங்க".கரட்டாண்டி "அடப்பாவி! இதை கேட்டா எவன்டா தைரியமா கல்யாணம் பண்ணுவான்.உன்னையெல்லாம்...."னு கட்டையனை துரத்துகிறான்.

Friday, August 22, 2008

ஆர் யூ சிங்கிள்?

சுதந்திரம் வாங்கி 61 வருஷம் ஆயிருச்சி.ஆனால் ஒரு கன்னிப் பையன்/பேச்சுலர் தனியா ஒரு ஊருக்கு ட்ரெயின்ல போயிட்டு வர முடியலை.நாம தனியா வர்ரதை பாத்தாலே இவங்களுக்கு எல்லாம் என்ன ஆகுமோ? அதுவும் சின்ன பையனா வேறா இருந்துட்டா போதும்.உடனே பக்கதுல வந்து கேக்குற முதல் கேள்வி"ஆர் யூ சிங்கிள்?".ஆமாங்க ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை,எப்ப நான் ட்ரெயின்ல போகும் போது எங்கிட்ட கேக்குற கேள்வி இது.

தமிழ் தெரிஞ்சவங்க தமிழில கேக்குறாங்க.இல்லைனா இப்படி இங்கிலீஷ்ல கேக்குறாங்க.யாரு கேக்குறாங்கனு கேக்குறீங்களா? ஒரு பையன்கிட்ட யாரு இந்த கேள்வி கேப்பாங்க? ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க? இப்படி உங்களுக்கு நிறைய கேள்வி எங்கிட்ட கேட்க தோணும்.அது ஏங்க எங்கிட்ட மட்டும் எல்லாரும் இவ்வள்வு கேள்வி கேக்குறீங்க?

சரி சரி.ரொம்ப நேரம் மொக்கை போடுறேனோ? சொல்றேன்.முதல் கேள்வி- யாரு கேக்குறாங்க? அதிகமா இந்த கேள்வியை எங்கிட்ட கேக்குறது பெண்கள்தான்.அதுவும் குடும்ப பெண்கள்தான்.சில சமயம் ஆண்களும் கேக்குறதும் உண்டு.அதுவும் அவங்க கூட வந்த பெண்களில் ஒருவரின் சார்பாக இவர் கேப்பார்.அடுத்த கேள்விகள் - ஏன் கேக்குறாங்க? எதுக்கு கேக்குறாங்க?அவங்களுக்கு அப்பர் பெர்த் அலாட் ஆயிருக்கும். என் கொடுமைக்கு எனக்கு லோயர் பெர்த் அலாட் ஆயிருக்கும்.பெர்த்த மாத்திக்கலாமுனு கேக்குறதுக்கு முன்னாடிதான் இவ்வளவு பில்டப்போட "ஆர் யூ சிங்கிள்?"னு ஆரம்பிப்பாங்க:).

ஆமாங்க. ஏன்டா நாம ரிஷர்வேஷ்ன் பண்றோமுன்னு தோணுற மாதிரி சில சமயம் "நாங்க குடும்பத்தோட வந்திருக்கோம்.வேற வேற கோச் போட்டுட்டாங்க" அப்படினு சொல்லி பொட்டி படுக்கையோட 5 கோச் மாறி போக சொல்லுவாங்க.நாமளும் லொங்கு லொங்குனு மாறி போனா அங்கே இருக்குற TTR உன் கோச்சுல போய் என்ட்ரி போட்டுட்டு வான்னு அலைய விடுவாரு.கோச் மாறி போறதுல இன்னொரு பிரெச்சனையும் இருக்கு.அங்கேயும் ஒருத்தன் "ஆர் யூ சிங்கிள்?"னு ஆரம்பிப்பான்.

போன தடவை இன்னும் கொடுமை.யாருமே எங்கிட்ட எதுவும் கேக்கலை.லோயர் பெர்த் வேற.போர்வையை போத்தி சந்தோஷமா தூங்கிட்டிருந்தேன்.ஒரு பதினொரு மணிக்கு ஒருத்தன் என்னை எழுப்பி அந்த கேள்வியை கேட்டுட்டான்:(. நீங்களே சொல்லுங்க, இந்த சுதந்திர இந்தியாவில நான் ரிசர்வ் பண்ண பெர்த்ல போறதுக்கு எனக்கு உரிமை இல்லையா?



Sunday, August 3, 2008

அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது...

கட்டையன்: என்னடா ரொம்ப சோகமா வர்றே?

கரட்டாண்டி: எங்கப்பா என் loveக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாருடா

கட்டையன்: எவன்டா இவன்? கமலே love பண்ணா அப்பாவை கண்டுக்காதேனு தசாவதராத்தில சொல்லிருக்காரு.இன்னமும் அப்பாட்ட பர்மிஷன் கேட்டுக்கிட்டு.

கரட்டாண்டி: தசாவதாரத்தில love scenea இல்லையேடா? சாமிய கண்டுக்காதேனுதான எப்பவும் சொல்லுவார். இப்ப அப்பாவையும் கண்டுக்காதேனு சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? நான் கவனிக்கலையே.

கட்டையன்: இந்த பாட்டு நீ கேக்கலையா? "அஷ்ட அட்சரம் ஏற்கும் மனது பஞ்ச அட்சரம் பார்க்காது".

கரட்டாண்டி: ஆமாம். அது சாமி பாட்டு இல்லையா? இதுல எங்கே love வருது? எங்க அப்பா எங்கே வர்ரார்?

கட்டையன்: ம்ம்.. உங்க அப்பா வேற இந்த பாட்டுல வரனுமா? இந்த பாட்டுக்கு அர்த்த்ம் தெரியுமா உனக்கு?

கரட்டாண்டி: தெரியாதே?

கட்டையன்: I Love You ஏற்கும் மனது Daddyயை பார்க்காது

கரட்டாண்டி: டேய்.. கதை விடாதே.

கட்டையன்: அஷ்ட அட்சரம்னா எட்டு எழுத்து அதாவது எட்டு லெட்டெர்ஸ் . I Love Youல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. எட்டு லெட்டெர்ஸ் வருதா?

கரட்டாண்டி: ஆமாம்

கட்டையன்:பஞ்ச அட்சரம்னா அஞ்சு எழுத்து அதாவது அஞ்சு லெட்டெர்ஸ். Daddyல இருக்கர லெட்டெர்ஸ கௌன்ட் பண்ணு. அஞ்சு லெட்டெர்ஸ் வருதா? இப்ப கணக்கு சரியா வருதா?

கரட்டாண்டி: அது சரி. அப்ப கமல் I Love Youனு சொன்னதுக்காகவா அந்த அடி அடிச்சாங்க.

கட்டையன்: பாட்டுக்கு அர்த்தம் சொன்னா அனுபவிக்கனும். ஆராயக்கூடாது.

Friday, August 1, 2008

பச்சை சாதம்

தமயந்தியும் தனலஷ்மியும் நெடுநேர நண்பிகள். (நெடு நாளைய நண்பிகள் தெரியும், அது என்ன நெடு நேர நண்பிகள்? ஒண்ணுமில்லை போன வாரம் பட்டு புடவை கடைல பேசி பழகி ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. புடவை கடைல எந்த பொண்ணுதான் சீக்கிரம் புடவை எடுத்துருக்காங்க. அதுவும் பட்டு புடவை!). அன்று சந்தையில் (சுத்த தமிழில் மார்க்கெட்டுனு சொல்லுவாங்க) இருவரும் சந்தித்து(சு.த மீட் பண்ணறது) கொண்டார்கள்.

தமயந்தி "என்ன தனம்? நல்லா இருக்கியா?"

தனம் "ஏதோ இருக்கேன். நீ எப்படி இருக்கே?"

தமயந்தி "இருக்கேன்.ஆனா இல்லை"

தனம் "விளங்கர மாதிரி சொல்லுடி. இப்படியே பேசினா நீயும் விளங்காம போயிடுவே"

தமயந்தி "நான் நல்லா இருக்கேன். அவர் நல்லா இல்லை"

தனம் "வீட்டுல உன் சமையலோ?"

தமயந்தி "ஆமான்டி. சும்மா ட்ரை பண்ணேன்.ஆனா என் சமையலால ஒண்ணும் அவருக்கு உடம்பு முடியாம போகலை. அவருக்கு கலர் அலர்ஜி இருக்கு.அவரு எந்த கலரா பாத்தாலும் பயப்படுறாரு. சாப்பிட்டா vomit எடுக்குறாரு"

தனம் "அச்சச்சோ! இப்படியெல்லாம் ஒரு மனுஷனுக்கு வியாதி வரனும்"

தமயந்தி "பச்சை சாதம் சாப்பிட்டதிலிருந்து படுத்த படுக்கையா
ஆயிட்டாரு"

தனம் "பச்சை சாதமா அப்படினா?"

தமயந்தி "உனக்கு முதல இருந்து சொன்னாத்தான் புரியும்.ஒரு நாள் வீட்டுல தயிர் சாதம்தான் இருந்துச்சு. தயிர் வெள்ளையா இருந்துச்சு. பாக்க கலரா இருக்கட்டுமேனு மஞ்ச பொடி போட்டு கொண்டு போய் கொடுத்தேன். சாப்டுட்டு வாந்தி எடுக்க ஆரம்பிச்சிட்டாரு"

தனம் "சாதரணமா சாம்பார்லையும் மஞ்ச பொடி தானே போடுவோம். அது ஒன்னும் பண்ணக்கூடாதே"

தமயந்தி "அது மட்டும் போடலை.சாம்பார்ல போடுற மஞ்ச பொடி தீந்துருச்சு.அதனால முகத்துக்கு போடுற பூசுமஞ்ச தூள் போட்டேன். ரெண்டும் மஞ்சள் தானே."

தனம் "சரியாத்தேனே பண்ணிருக்கே"

தமயந்தி "சரி அவருக்கு தயிர் சாதம் ஒத்துக்கலையோனு அடுத்த நாள் தக்காளி சாதம் வச்சேன். அப்பதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அவருக்கு சிகப்பு கலர் பிடிக்காதுன்னு."

தனம் "எந்த கலர் பிடிச்சா என்ன பிடிக்காட்டா என்ன? நீ சமைக்கிற்தே பெரிய விசயம்.இதுல பிடிச்ச கலருல வேற பண்ணனுமா?

தமயந்தி "என்ன இருந்தாலும் இத்தனை நாள் நமக்கு சமைச்சு போட்டவரு. அவருக்கு பிடிச்ச கலருல பண்ணாதேனே நல்லா இருக்கும்."

தனம் "அப்ப வேற சாதம் பண்ணீயா?"

தமயந்தி "அதெப்படி செஞ்ச சாதத்தை வேஸ்ட் பண்ணலாமா? அவருக்கு ஆரஞ்சு கலர்னா ரொம்ப பிடிக்கும். அதனால தக்காளி சாதத்தை ஆரஞ்சு கலரா மாத்திட்டேன்."

தனம் "சூப்பர். எப்படி?"

தமயந்தி "கேசரி பவுடர் கலந்துட்டேன்"

தனம் "ஓ கேசரி பவுடர் போட்டதும் ஆரஞ்சு கலருல மாறிடுச்சா?"

தமயந்தி "எங்கே? இருந்த கேசரி பவுடர் எல்லாம் போட்டும் ஆரஞ்சு கலரா மாறலை. அதனால ரெண்டு ஆரஞ்சு பழம் வெட்டி ஜூஸ் ஆக்கி போட்டேன். "

தனம் "நீ ஃபான்டா ட்ரை பண்ணிருக்கலாம்"

தமயந்தி "அதுதான்டி கடைசியல கை கொடுத்துச்சு.ஃபான்டா ஊத்தனுதுக்கு அப்பறம்தான் நான் நினைச்ச கலரே வந்துச்சு. இவ்வளவு சூப்பரா சமைச்சு கொண்டு போய் கொடுத்த சாப்டுட்டு மறுபடியும் வாந்தி."

தனம் "அடடா உன் சமையலுக்கு வந்த கொடுமையை பாரு"

தமயந்தி "அப்புறம் அவரு என்னம்மோ நான் விஷத்தை கொடுத்த மாதிரி ஒரு லுக் விட்டுட்டு இனிமேல் நீ சமைக்கவே வேண்டாம். பச்சையா கொடுத்தா போதும்.அப்படியே சாப்பிடிரேனு சொல்லிட்டார். "

தனம் "அப்ப உனக்கு சமையல இருந்து விடுதலை"

தமயந்தி "அப்படி விட்டுற முடியுமா? அவர் அப்படி சொன்னதுக்கு அப்புறந்தான் எனக்கு புரிஞ்சுச்சு. அவருக்கு பச்சை கலர்தான் புடிக்குமுன்னு"

தனம் "எப்படி இப்படி?"

தமயந்தி "சரின்னு மார்க்கெட் போய் பச்சையா ஏதாச்சும் வாங்கலாமுன்னு போனேன். அன்னைக்கு ஏதோ லாரி strike.அதனால பச்சை மிளகாய்தான் கிடைச்சுது. அதை வச்சுத்தான் பச்சை சாதம் பண்ணேன்.அப்புறந்தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு.அவருக்கு ஏதோ அலர்ஜி இருக்குன்னு. அதுவும் கலர் அலர்ஜினு."

தனம் "சூப்ப்ர்டி. உன் ரெசிபி எல்லாம் கொடு. நானும் என் புருஷனுக்கு சமைச்சு போட்டு அவருக்கு கலர் அலர்ஜி இருக்கானு டெஸ்ட் பண்ணனும்."

தமயந்தி வேகவேகமா எல்லா ரெசிபியும் எழுதி கொடுக்க தனம் சந்தோஷமாக வாங்கி கொண்டு கலர் அலர்ஜி டெஸ்ட் எடுக்க வீட்டுக்கு சென்றாள்.

--------------------------------------------------------------------------
சும்மா தோனுச்சு. எழுதிட்டேன். நல்லா இருந்தா கமென்ட் போட்டுட்டு போங்க. நல்லா இல்லைனா கலாய்ச்சுட்டு(விருப்பப்பட்டா திட்டவும் செய்யலாம்) போங்க.

Wednesday, July 23, 2008

இடி மின்னல், கோலம்

பள்ளி பருவத்தில் தோன்றிய கவிதைகளை(ஹைக்கூ போல் இருக்கும்) இங்கு பதிவு செய்கிறேன்.

கார்கில் யுத்தம் நடந்தபோது எனக்கு தோன்றிய கவிதை:

இடி மின்னல்
மேகங்கள் செய்யும் யுத்தம்
வானிலும் எல்லை
மீறலோ?

கல்வி
கற்றவன் நனவு
கல்லாதவன் கனவு
இருவருக்கும் இன்றது
செலவு!




இந்த கவிதை படித்ததா இல்லை எனக்கு தோன்றியதா என்று நினைவில் இல்லை. ஆனால் என்றும் என் நினைவை விட்டு நீங்கா கவிதை.

கோலம்
புள்ளியில் வரைந்த கவிதை
புனைந்த தேவதை
யாரோ?



தொலைவில்

அந்தஸ்து அதிகாரம்
ஆடம்பரம் - அருவெருப்பாய்
அருகில்
அதனால்
அன்பு அமைதி
ஆனந்தம் - அணுகமுடியா
தொலைவில்

ஓட்டம்

கசடற கற்க
நாடுகிறான் தாய்நாடு
கற்றதை காசாக்க
ஓடுகிறான் வெளிநாடு

Friday, July 11, 2008

வாழும் வழி...

வாழும் வழி...

வார்த்தைகள் தேடி
வறண்டு போனேன்
வாழ்த்த வழிகள்தேடி
வழிதொலைந்து போனேன்
வாழ்த்தி வாழ்பவர்களின்
வல்லமை வசப்படாமல்
வசைபாடி வலுவிழேந்தேன்
வாழும் வழிதெரியா என்னை...

கண்டதும்..

கண்டதும்..
ஆராய்கிறான்
அசை போடுகிறான்
அவகாசம் கேட்கிறான்
நட்பை ஏற்றுக்கொள்ள

உருகுகிறான்
உண்ண மறக்கிறான்
உறக்கம் துறக்கிறான்
காதலைக் கற்றுக்கொள்ள

கண்டதும்
கண்டுகொள்ள சாத்தியமில்லை
நட்பை - சாத்தியம்
காதலுக்கு மட்டுமே!
Blog Widget by LinkWithin