Friday, July 31, 2009

வழக்கமான ஏக்கம்

வழக்கமான விடியல்
வழக்கமான விழித்தல்
வழக்கமான தேனீர்
வழக்கமான குளியல்
வழக்கமான அலுவலக பயணம்
வழக்கமான அலுவல்
வழக்கமான அரட்டை
வழக்கமான அயற்சி
வழக்கமான தூக்கம்
வழக்கமான ஏக்கம்
வழக்கத்திற்கு மாறாக
ஏதும் நடக்காதா
என்று!

Tuesday, July 28, 2009

மணியை கொல்லப் போறாங்க

“ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டு ஹாய் செல்லம். உங்க செல்ல குழந்தைகள் என்னோட பேச உடனே கால் பண்ணுங்க. நம்ம ப்ரொக்ராமோட ஃபர்ஸ்ட் செல்லம் யாருன்னு பாப்போமா? ஹலோ!”.

“அல்லோ”

“ஹலோ! செல்லம் உங்க பேரு என்ன?”

“பேர்ர்ரு ராஜா”

“என்ன படிக்கிறீங்க?”

“படிக்கலை.ஹோம் ஒர்க் பண்ணிட்டிருக்கேன்”

“இலலைம்மா. எந்த கிளாஸ் படிக்கிறீங்க?”

“யூ.கே.ஜி. சி செக்சன்”

“சமத்து. இப்ப நம்ம ப்ரோக்ரம்ல என்ன பண்ண போறீங்க?”

“அழுவ போறேன்”

“ஏன் செல்லம்? அம்மா அடிச்சாங்களா?”

“இல்லை. மணி இன்னைக்கு என்னை விட்டு போக போறான்”

“மணி யாரு?”

“என் ஃப்ரெண்டு”

“ஊருக்கு போறானா”

“இல்லை செத்து போகப் போறான். செத்ததுக்கப்புறம் திரும்பி வர மாட்டானாம். அதான் அழுவ போறேன்”

“மணி செத்துப்போகப் போறான்னு யாரு உனக்கு சொன்னா?”

“எங்கப்பா”

“மணிக்கு உடம்பு சரியில்லையா? சாமிக்கிட்ட ப்ரே பண்ணிக்கோ. சாமி காப்பாத்துவாரு”

“இல்லை. மணியை கொல்லப் போறாங்க”

“கொல்லப் போறாங்களா? யாரு? உங்க அப்பாட்ட சொல்லி அவங்களை போலீசுல புடிச்சு கொடுக்க சொல்லு”

“கொல்லச் சொன்னதே எங்கப்பாதான்.கோயில் பூசாரிதான் கொல்ல போறார்”

“நீ என்ன சொல்றே? ஒன்னும் புரியலை”

“போன வருஷம் எனக்கு உடம்பு சரியலை.அதனால் மணியை வெட்டி பொங்க வைக்கிறேன்னு எங்கப்பா வேண்டிக்கிட்டாராம்.அதான் இன்னைக்கு வெட்டப் போறாங்களாம்”

“மணியை வெட்டி பொங்கல் வைக்கப் போறாங்களா? ஓ! மணி உங்க வீட்டுல வளர்ற ஆடா?”

“ஆமா. சின்ன வயசுலருந்து எனக்கு இருக்குற ஒரே ஃப்ரெண்டு. ம்ம்ம்...”

“அழக்கூடாது செல்லம். ஹலோ ஹலோ. அச்சச்சோ! லைன் கட்டாயிருச்சு.இப்ப பேசுன செல்லத்துக்குக்காக ஒரு பாடல்.கேட்டு என்ஞ்சாய் பண்ணுங்க”


அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
...
ஆத்தோரம் மேயும் குறும்பாடு
அதை போட்டாத்தான் நம்க்கு சாப்பாடு
...

Friday, June 26, 2009

நாய் வித்த காசு

“என்ன பாபு! மூணு நாளா கடைய திறக்காம எங்கே போய்ட்ட?”

“ஒண்ணுமில்ல சார். ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன்.”

“ஆஸ்பத்திரிக்கா? உடம்பு கிடம்பு சரியில்லையா?”

“அத விடுங்க சார். உங்களுக்கு என்ன வேணும்? வழக்கம் போல கோல்டு பிளேக் தானே?”

“எத்தனை வருஷமா உன் கடைக்கு வர்ரேன்? உன் மேல அக்கறை இல்லாமலா கேக்கறேன்.உன் உடம்புக்கு என்னனு முதல்ல சொல்லு”

“சொன்னா உங்க மனசு கஷ்டப்படும் சார்.உங்களுக்கு தெரிஞ்சு ஒண்ணும் ஆகப் போறதில்லை.எல்லாம் முடிஞ்சு போச்சு”

“என்னப்பா இப்படி எல்லாம் பேசுற? அப்படி என்னதான் உடம்புக்கு”

“ஏதோ புத்து நோயாம்? இன்னும் ஆறு மாசந்தான்னு டாக்டர் டைம் கொடுத்துட்டார்”

“என்னது? உனக்கு புத்து நோயா? பெட்டிக்கடை பூரா சிகரெட் வச்சு வித்தாலும் உனக்கு தம் அடிக்கிற் பழக்கம்
கிடையாதே? உனக்கு எப்படி இது?”

”அததான் நானும் டாக்டர்கிட்டே கேட்டேன்.அவரு என் தொழில் என்னனு கேட்டாரு. சொன்னேன்.அவரு சொன்னதை கேட்டா உங்களால் நம்ப முடியாது”

“அப்படி என்ன சொன்னார்?”

“தம் அடிக்கிறதனால மட்டும் இந்த வியாதி வராதாம்.தம் அடிக்கிறவங்க கூட ரொம்ப நேரம் இருந்தாலும் இந்த வியாதி வருமாம்”

“நீதான் தம் அடிக்கிறவங்க கூடவே சேர மாட்டியே?கடையே கதினு இருக்கற ஆளாச்சே?”

“என்ன சார் சொல்றீங்க?என் கடையில தம் வாங்கறவங்க வீட்டுக்கு கொண்டு போயா அடிக்கிறாங்க? வாங்கின கையோட கடைக்கு முன்னாடிதானெ அடிக்கிறாங்க.அவ்வளவு புகையும் எம்மேலதான”

“நீ சொல்றதும் சரிதான். உன் கஷ்டத்துக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன்ல”

“நாய் வித்த காசு குரைக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனா குரைச்சுருச்சு.என் ஆயுசையும் குறைச்சுருச்சு”


Blog Widget by LinkWithin